டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது; விளைச்சலும் அமோகம் என்கிறார்கள் விவசாயிகள்.
இதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றும் சொல்கின்றனர். முன்கூட்டியே குறுவை அறுவடை பணியை தொடங்கியதால், அரசு செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்தது.
இந்த நிலையில் சாக்கு பற்றாக்குறை, லாரி தட்டுப்பாடு, சேமிப்பு கிடங்குகளில் ஏற்கனவே இருந்த நெல் மூட்டைகள் தேக்கம் போன்றவற்றால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் நெல் கொள்முதல் மந்தகதியில் நடைபெற்றதால், அறுவடை செய்த நெல்லுடன் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நெல் கொள்முதல் முற்றிலும் முடங்கியது.
இதனால், கொள்முதல் நிலையங்கள் மற்றும் சாலையோரங்கள் என எங்கும் நெல்லுடன் விவசாயிகள் காத்திருந்தனர். இந்நிலையில் அறுவடை செய்த நெல் தொடர்மழையில் நனைந்தது.
தீபாவளி பண்டிகையை கணக்கில் கொண்டு அறுவடை செய்த விவசாயிகள் நெல்லை போட முடியாமல் தவித்தனர்.
அத்துடன், கொள்முதல் செய்யப்படாததால் நெல் தேங்கிய நிலையில் அறுவடை செய்யாமல் பல விவசாயிகள் காத்திருந்தனர்.
இந்த சூழலில், டெல்டாவில் தொடர் மழை பெய்ததால், கொள்முதல் நிலையங்கள் மற்றும் சாலையோரம் வைக்கப்பட்ட நெல் மணிகள் மழையில் நனைந்ததால் வீணாகின. பல இடங்களில் நெல் மணிகள் முளைக்கத் தொடங்கி விட்டன. வயலில் மழை நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சாய்ந்து முளைக்க ஆரம்பித்தன.
விளைஞ்சும் பயனில்லாமல் போனதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.

தஞ்சாவூர் அருகே உள்ள காட்டூர், மூர்த்தியம்பாள்புரம், மன்னார்குடி அருகே உள்ள பகுதிகளில் பாதிப்புகளை பார்வையிட்டார்.
காட்டூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி தேங்கி கிடக்கும் நெல் மணிகளை பார்வையிட்டார்.
அப்போது முளைத்த நெல்லை கையில் எடுத்து பார்த்தார். அப்போது, பெண் விவசாயி ஒருவர், “எங்கள் நிலையை பார்த்தீர்களா?” என்று முளைத்த நெற்பயிர் காட்டினார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விவசாயிகளின் துயர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசுக்கு வலியுறுத்துவேன். உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும். நானும் ஒரு விவசாயி தான்.

அதனால் விவசாயிகள் படும் கஷ்டங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். விவசாயிகளின் கண்ணீர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், விவசாயிகளிடம் கேட்டால் வெறும் 800 நெல் மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கின்றனர். தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது; எனவே, விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது” என்றார்.