ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு‌ அமெரிக்கா தடை: பாதிக்கும் ரிலையன்ஸ்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன?


ரஷ்ய எண்ணெய் இறக்குமதி

‘இனி இந்தியா மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் குறைக்கும்’ – இது கடந்த இரண்டு – மூன்று நாள்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஒன்று.

இன்னொரு பக்கம், தற்போது அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயிலுக்கு தடை விதித்துள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு நிறுவனங்களுடன் பிற நிறுவனங்களோ, நாடுகளோ வர்த்தகம் மேற்கொண்டால், அது அமெரிக்காவின் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். ஆனால், அமெரிக்கா எந்த மாதிரியான தடையை விதித்துள்ளது என்பது இன்னும்‌ தெளிவாக தெரியவில்லை.

இந்தத் தடைகள் இந்தியாவிற்கு ரஷ்யா செய்யும் எண்ணெய் ஏற்றுமதியைக் கடுமையாக பாதிக்க உள்ளது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

சிக்கலில் ரிலையன்ஸ் நிறுவனம்

இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய பொது சந்தையில் இருந்து தான் எண்ணெயை வாங்குகின்றன. ஆனால், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துடன் 25 ஆண்டுகால ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.‌ இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் கையெழுத்தானது.

இந்த நிலையில், தற்போதைய தடை விதிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பெரிதாக பாதிக்க உள்ளது.

அதனால் தான், இந்தத் தடைகளால், இந்தியாவில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க உள்ளதாக முடிவெடுத்துள்ளது.

இந்தியா என்ன செய்ய உள்ளது?

ஆனால், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கப்போவதில்லை என்ற ட்ரம்ப்பின் கூற்று குறித்து இந்திய அரசு இன்னும் எந்தத் தெளிவான விளக்கத்தையும் வழங்கவில்லை.

முன்பு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை, ‘இந்திய தேசத்தின் நலன் கருதி ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும்’ என்று கூறி வந்தார்கள்.

ஆனால், லேட்டஸ்டாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ‘நிலையற்ற ஆற்றல் சூழலில், இந்திய நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே எங்களுடைய நிலையான முன்னுரிமை.

ரந்தீர் ஜெய்ஸ்வால்
ரந்தீர் ஜெய்ஸ்வால்

இப்போதைய அமெரிக்க அரசாங்கம் இந்தியா உடனான எரிசக்தி ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன” என்று கூறியிருந்தார்.

அவர் ரஷ்யா உடனான எண்ணெய் வர்த்தகம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆக, அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றால், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா என்ன சொல்கிறது? ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எண்ணெய் வாங்குமா? ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின்‌ நிலைப்பாட்டைப் பொறுத்தே தங்களுடைய வர்த்தகம் அமையும் என்கிறது.

இவைகளுக்கான பதில் இந்திய அரசு வாயைத் திறந்தால் மட்டுமே கிடைக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *