latest

இனி அனைத்து இன்சூரஸுக்கும் ஒரே செயலி.. Bima Sugam பற்றி தெரியுமா..? என்னென்ன பலன்கள் கிடைக்கும்..?


இந்தியாவில் காப்பீடு (Insurance) வாங்குவது, புதுப்பிப்பது மற்றும் கிளைம்கள் செய்வது ஆகியவை யுபிஐ மூலம் பணம் அனுப்புவது போல எளிமையாக போகிறது. இந்தக் கனவை நனவாக்கும் வகையில், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), ‘பீமா சுகம்’ (Bima Sugam) என்ற ஒரு டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சேவை டிசம்பர் 2025 ஆம் ஆண்டுக்குள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘பீமா சுகம்’ டிஜிட்டல் தளம் எப்படி செயல்படும்..?: பீமா சுகம் தளமானது, காப்பீட்டுத் துறையில் உள்ள அனைவரையும் அதாவது, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள், பொது காப்பீட்டு நிறுவனங்கள், முகவர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் ஆகிய அனைவரையும் ஒரே டிஜிட்டல் தளத்தின் கீழ் கொண்டுவருகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

இனி அனைத்து இன்சூரஸுக்கும் ஒரே செயலி.. Bima Sugam பற்றி தெரியுமா..? என்னென்ன பலன்கள் கிடைக்கும்..?

வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் முக்கியப் பயன்கள் : காகிதமற்ற செயல்பாடு : பாலிசி ஆவணங்கள், கே.ஒய்.சி மற்றும் கிளைம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும். இதனால் காகித வேலைகள் முற்றிலுமாக இருக்காது. அதேபோல், கிளைம்களை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிக்க முடியும்.

சில நொடிகளில் புதுப்பிப்பு : பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்களின் உடல்நலம், ஆயுள் அல்லது மோட்டார் காப்பீட்டுத் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து, உடனடியாக வாங்கவோ அல்லது புதுப்பிக்கவோ முடியும்.

பல்வேறு மொழிகளில் வழிகாட்டுதல் : செயல்முறை முழுவதும் வழிகாட்ட பல மொழிகளில் குரல் ஆதரவு வழங்கப்படும்.

குறைகளைத் தீர்க்கும் வசதி : குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிப்பதற்கான தீர்வு வசதி, இந்த செயலிக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளது.

தேவைக்கான காரணம் என்ன..?: இந்தியாவில் காப்பீடு விற்பனைக்கு ஒரு சந்தை (Marketplace) இல்லாதது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்ததில்லை. மாறாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) காப்பீட்டின் பங்கு 3.7% (2023-24 நிதி ஆண்டு) என்ற அளவில் குறைவாகவே உள்ளது. சிறிய நகரங்களில் உள்ள பலரும் இன்னும் காப்பீட்டின் அவசியத்தை உணரவில்லை. காப்பீட்டை பற்றி அவர்கள் குழப்பமானதாகவும், பயனற்ற முதலீடாகவும் அல்லது தேவையற்ற ஒன்றாகவும் கருதுகின்றனர்.

எனவே, காப்பீட்டுத் துறையில் உண்மையான மாற்றம் என்பது மக்களின் மனநிலையில் இருந்தும், விழிப்புணர்வில் இருந்தும் வர வேண்டும். இருப்பினும், ஐ.ஆர்.டி.ஏ.ஐ.யின் ‘பிமா சுகம்’ முயற்சி சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான படியாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்த தளம் யுபிஐ போல மிகப் பெரிய வெற்றியைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *