தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அரசியல் மோதல்களுக்கு நடுவில், கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
அதைத் தொடர்ந்து, கரூரில் உயிரிழந்த குடும்பத்துக்கு தவெக தலைவர் விஜய் ரூ. 20 லட்சத்தை நிவாரணமாக வழங்கினார். அதே நேரம், கரூரில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இதற்கிடையில் தவெக தலைவர் கரூர் செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு கரூரில் பாதிக்கப்பட்ட 37 குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து தவெக தலைவர் சந்தித்தார்.

அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து கவனித்துக்கொள்வதாகவும் ஆறுதல் கூறியதாக தகவல் வெளியானது. அதே நேரம் தவெக தலைவர் விஜய் நேரில் செல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வரவழைத்து சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கரூர் மக்களை நேரில் வரவழைத்து விஜய் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
